கோவை மக்கள் சேவை மையம் சார்பில் பெண்களுக்கான சிறுகடன் உதவி வழங்கும் வழிகாட்டு மையத்தின் தொடக்க நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது.
கோவை மக்கள் சேவை மையம் சார்பில் பல்வேறு சமூக செயல்பாடுகளை அந்த அமைப்பின் நிறுவனரும் பாஜக மாநில பொதுச்செயலாளருமான வானதி சீனிவாசன் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில்,பெண்களுக்கான சிறுகடன் உதவி வழங்கும் வழிகாட்டு மையத்தின் துவக்க நிகழ்ச்சி கோவை 100 அடி சாலையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் தலைமை வகித்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏழை எளிய பெண்கள் எவ்வாறு சிறு தொழில் கடன் பெறுவது, அதைப் பெறுவதற்கான வழிகள் எப்படி என்பதை அவர்களுக்கு வழிகாட்டவே இந்த உதவி மையம் துவக்கப்பட்டுள்ளது அவர் கூறினார். மேலும் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன்களை தொழில் மேற்கொள்ள ஆர்வம் உள்ள ஏழை எளிய பெண்களுக்கு பெற்றுத் தருவதற்கான அறிவுறுத்தலும் இந்த மையத்தின் மூலம் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
வழிபாட்டுத்தலங்கள் திறப்பது குறித்து செய்தியாளர்களிடம் பதிலளித்த அவர் கேரளா ஆந்திரா கர்நாடகா போன்ற மற்ற மாநிலங்கள் கூட வழிபாட்டுத் தலங்களை திறப்பதற்கான முடிவை எடுத்துள்ள நிலையில் தமிழகம் இன்னும் இது குறித்த எந்த அறிவிப்பும் தெளிவாக வெளியிடாதது ஏமாற்றத்தை அளிப்பதாக கூறினார். மேலும் தகுந்த பாதுகாப்புடன் தமிழகத்தில் மத வழிபாட்டுத் தலங்களை திறக்க வேண்டும் என்றும் முதலமைச்சருக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.