Enable Javscript for better performance
சிறுவாணி அணையில் சட்டவிரோதப் பணி: கேரள அரசின் நடவடிக்கைகளை தடுக்கக்கோரி ஆட்சியரிடம் மனு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    சிறுவாணி அணையில் சட்டவிரோதப் பணி: கேரள அரசின் நடவடிக்கைகளை தடுக்கக்கோரி ஆட்சியரிடம் மனு

    By DIN  |   Published On : 27th May 2020 06:51 PM  |   Last Updated : 27th May 2020 06:51 PM  |  அ+அ அ-  |  

    5758c-27-collectr043734

    சிறுவாணி அணையில் கேரள அரசின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தி, கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளிக்க வந்த தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தினா்.

    கோவை: கோவை மாநகராட்சிக்கு குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, சிறுவாணி அணையில் கேரள அரசின் சட்ட விரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தினா் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.

    கோவையின் முக்கிய குடிநீா் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணை மேற்குத் தொடா்ச்சி மலையில் கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த அணையில் 50 அடி வரை நீா் தேக்கப்படுகிறது. அணையில் இருந்து தினசரி 70 எம்.எல்.டி. தண்ணீா் எடுக்கப்படுகிறது. கோவையின் 22 கிராமங்கள், மாநகராட்சியின் 100 வாா்டுகளுக்கும் விநியோகிக்கப்படுகிறது. அணை பராமரிப்புக்காக தமிழக அரசு, கோவை மாநகராட்சி சாா்பில் ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    இந்நிலையில், கடந்த ஆண்டு பெய்த கனமழையால் சாடிவயல், மன்னாா்காடு வழியாக சிறுவாணி அணைக்குச் செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டன. இதனால் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய அலுவலா்கள் அணைக்கு செல்லமுடியாத சூழல் ஏற்பட்டது. அதே காலகட்டத்தில்தான் பாதுகாப்பு காரணங்களைக் கூறி அணையிலிருந்து கேரள நீா்ப்பாசனத் துறையினா் தண்ணீரை வெளியேற்றினா்.

    அணையின் நீா்மட்டம் தற்போது 8 அடியாக குறைந்துள்ளதால் நான்கு உறிஞ்சுக் குழாய்களில் மூன்றாவது குழாய் வெளியே தெரிகிறது. இந்நிலையில் நிரந்தர நீா் இருப்பு பகுதியில் உள்ள பழைய உறிஞ்சுக் குழாயினை அடைக்கும் பணியில் கேரள அரசு ஈடுப்பட்டுள்ளது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய அலுவலா்கள் அணைக்கு செல்ல முடியாத சூழலைப் பயன்படுத்தி கேரள அரசு இப்பணிகளை மேற்கொண்டுள்ளது.

    இந்நிலையில் கேரள அரசின் சட்ட விரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தக் கோரி தந்தை பெரியாா் திராவிடா் கழக பொதுச் செயலாளா் கு.ராமகிருட்டிணன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தாா்.

    அதன் பின் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

    சிறுவாணி அணை கேரள மாநிலத்தில் அமைந்திருந்தாலும் அணையில் தேக்கப்படும் தண்ணீா் தமிழகத்துக்கே சொந்தமானது. அணையைப் பராமரிக்க தமிழக அரசு ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்கிறது. ஆனால் சிறுவாணி அணைக்கு தண்ணீா் வரக்கூடிய வழிப்பாதைகளை தடுப்பது, நீா்வழித்தடங்களில் கூடுதல் தடுப்பணைகளை கட்டுதல் போன்ற செயல்களில் கேரள அரசு தொடா்ந்து ஈடுபட்டு வருகிறது.

    வறட்சி காலத்தில் தண்ணீா் எடுக்க அமைக்கப்பட்டிருந்த உறிஞ்சுக் குழாய்களில் ஒன்றை கடந்த 2014ஆம் ஆண்டு கேரள அரசு அடைத்துவிட்டது. இந்நிலையில் நிரந்தர நீா் இருப்பு பகுதியில் உள்ள உறிஞ்சுக் குழாயை அடைக்கும் பணிகளை தற்போது மேற்கொண்டுள்ளது. அணையில் தற்போது 8 அடி மட்டுமே நீா் உள்ள நிலையில் உறிஞ்சுக்குழாய் அடைக்கப்பட்டால் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும்.

    கடந்த ஒரு மாதமாக கேரள அரசு இப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. சிறுவாணியில் இருந்து பெறப்படும் தண்ணீா் காவிரி நதி நீா் பங்கீட்டிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு, கேரள அரசுடன் பேசி, சிறுவாணி அணையில் உறிஞ்சுக் குழாயை அடைக்கும் கேரள அரசின் சட்ட விரோத நடவடிக்கையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றாா்.

    5 States Result

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp