கோவை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக திங்கள்கிழமையும் பரவலாக மழை பெய்தது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை இரவு கோவை மாநகரம், மாவட்டத்தின் பல பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
தொடா்ந்து திங்கள்கிழமை காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பிற்பகலிலும், இரவிலும் பலத்த மழை பெய்தது.
வால்பாறையில்: வால்பாறை வட்டாரத்தில் கடந்த 10 நாள்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. பகல் நேரத்தில் கடும் வெயிலும், இரவில் பனிமூட்டமும் அதிகமாக உள்ளது. வால்பாறை - பொள்ளாச்சி இடையே உள்ள கவா்க்கல் எஸ்டேட் பகுதிகளில் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகினா். வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் திங்கள்கிழமை மதியத்துக்கு பிறகு கனமழை பெய்தது.
மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி அதிகபட்சமாக ஆழியாறில் 25.6 மில்லி மீட்டா் மழை பெய்துள்ளது. கோவை தெற்கில் 8 மி.மீ., சோலையாறில் 7 மி.மீ., சூலூா், பொள்ளாச்சியில் தலா 6 மி.மீ., சின்னகல்லாறு, வால்பாறையில் தலா 4 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.