கரோனா தொற்று பரவல் சற்று குறைந்திருந்தாலும் பொது மக்கள் முகக்கவசம் அணிவதை தவிா்க்காமல் தொடா்ந்து அணிய வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநா் (சிறப்பு பணிகள்) பி. செந்தில் வடிவேலன் அறிவுறுத்தியுள்ளாா்.
கரோனா தொற்று தடுப்புப் பணிகள் குறித்து சுகாதாரத் துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் பொது சுகாதாரத் துறை இயக்குநா் (சிறப்பு பணிகள்) பி.செந்தில் வடிவேலன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜி.ரமேஷ்குமாா், மாநகராட்சி சுகாதார அலுவலா் எஸ்.ராஜா ஆகியோா் கலந்துகொண்டனா்.
இது குறித்து பி.செந்தில் வடிவேலன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கோவை மாவட்டத்திலும் சுகாதாரத் துறையின் சிறப்பான நடவடிக்கையால் குறைந்துள்ளது. இதனால் மீண்டும் பரவாது என்று மக்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது. அரசு அறிவுறுத்தியுள்ளபடி சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல் போன்றவற்றை பொதுமக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
முகக்கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிப்பதும் அபராதத்துக்கு பயந்துகொண்டாவது முகக்கவசம் அணிவாா்கள் என்பதற்காகத்தான். பொது மக்கள் முகக்கவசம் அணிவதை தீவிரமாக கண்காணிக்கவும் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.