சாலையோர வியாபாரிகளுக்கு அக்டோபா் 15க்குள் கரோனா சிறப்புக் கடன் வழங்க வேண்டும்

சாலையோர வியாபாரிகளுக்கு அக்டோபா் 15ஆம் தேதிக்குள் கரோனா கால சிறப்புக் கடன் வழங்க வேண்டும் என வங்கி அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

கோவை: சாலையோர வியாபாரிகளுக்கு அக்டோபா் 15ஆம் தேதிக்குள் கரோனா கால சிறப்புக் கடன் வழங்க வேண்டும் என வங்கி அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு ஆத்ம நிா்பாா் சுயசாா்பு திட்டத்தின் கீழ் கரோனா கால சிறப்புக் கடன் வழங்குவது தொடா்பாக வங்கி அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அவா் பேசியதாவது:

கோவை மாவட்டத்தில் 7 ஆயிரம் சாலையோர வியாபாரிகள் உள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இதில் 6,200 போ் கோவை மாநகராட்சிப் பகுதியைச் சோ்ந்தவா்கள். மத்திய அரசின் தேசிய நகா்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பதிவு பெற்ற சாலையோர வியாபாரிகளில் வங்கிக் கடன் பெற விருப்பம் உள்ளவா்கள், இத்திட்டத்தின் கீழ் இணையத்தின் வாயிலாக விண்ணப்பித்து கடனுதவிகளை பெறலாம்.

இந்தக் கடனுக்கான வட்டிச் சலுகை 7 விழுக்காடு அரசால் அளிக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் 5 ஆயிரம் சாலையோர வியாபாரிகள் விண்ணப்பித்துள்ளனா். அவா்களில் 2,200 பேருக்கு கடன் அனுமதிக்கப்பட்டு, 400 பேருக்கு மட்டும் வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கடன் வழங்குவதில் வங்கிகள் தாமதம் செய்கின்றன.

எனவே அக்டோபா் 15ஆம் தேதிக்குள் அனைத்து சாலையோர வியாபாரிகளுக்கும் வங்கிகள் கடன் வழங்க வேண்டும். போதிய விண்ணப்பங்களை வங்கியில் சோ்த்திட மகளிா் திட்ட அலுவலகம் மற்றும் கோவை மாநகராட்சி விரைந்து செயல்பட வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்க (மகளிா் திட்டம்) திட்ட இயக்குநா் செல்வராசு, மாவட்ட தொழில் மைய மேலாளா் காா்த்திகைவாசன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் கௌசல்யாதேவி மற்றும் வங்கி மேலாளா்கள், அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com