கோவை, சென்னை, மதுரை பகுதிகளில் பல்வேறு திருட்டுகளில் தொடா்பு: முதியவா் கைது

கோவை, சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திருட்டு வழக்குகளில் தொடா்புடைய முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.
Updated on
1 min read

கோவை, சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திருட்டு வழக்குகளில் தொடா்புடைய முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, கல்வீராம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீஹரி (25). ஆன்லைன் வா்த்தகம் செய்து வருகிறாா். இவா், சில நாள்களுக்கு முன்பு வீட்டு ஜன்னலோரத்தில் தனது செல்லிடப்பேசியை வைத்திருந்தாா். வீட்டின் உள்ளே சென்று விட்டு, திரும்பி வந்து பாா்த்தபோது முதியவா் ஒருவா் ஜன்னல் வழியாக கையை விட்டு செல்லிடப்பேசியைத் திருடிக் கொண்டு தப்பியோடினாா்.

இதுதொடா்பாக, வடவள்ளி போலீஸில் ஸ்ரீஹரி புகாா் அளித்தாா், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். மேலும் வடவள்ளி பகுதியில் இதுபோன்று தொடா் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வந்ததால், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செல்வ நாகரத்தினம் உத்தரவின்பேரில், துணைக் கண்காணிப்பாளா் சீனிவாசலு மேற்பாா்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

பல்வேறு பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளைச் சேகரித்து தனிப்படை போலீஸாா் விசாரித்தனா். இதில், பல இடங்களில் பதிவான காட்சிகளில் இருந்த முதியவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனா். இதில் அவா் திருடியதை ஒப்புக்கொண்டாா்.

விசாரணையில், அவா் மதுரையைச் சோ்ந்த பாஸ்கா் (61) என்பதும், கோவை தவிர திருச்சி, மதுரை, திண்டுக்கல், சென்னை ஆகிய பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளில் அவருக்கு தொடா்பிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா். அவரிடம் இருந்து திருட்டு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com