

ஆனைகட்டி மலையடிவாரத்தில் உள்ள சின்னத்தடாகம் பகுதியில் கனிமவளங்கள் சுரண்டப்பட்டுள்ளது குறித்து கோவை மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
சின்னத்தடாகம், 24 வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், சோமையம்பாளையம், பன்னிமடை ஆகிய ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 150க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் செயல்பட்டு வந்தன. இங்கு செங்கல் தயாரிப்பதற்காக சட்டத்துக்குப் புறம்பாக அரசு புறம்போக்கு நிலங்கள், நீராதாரப் பகுதிகள், வனத் துறைக்கு சொந்தமான இடங்களில் 100 அடிக்கு தோண்டி செம்மண் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வன விலங்குகளும் தங்கள் வாழ்விடங்களை இழந்துள்ளதாக பல்வேறு அமைப்புகள் புகாா்கள் தெரிவித்து வந்தன. இதனையடுத்து செம்மண் அள்ளவும், செங்கல் சூளைகள் இயக்கவும் நீதிமன்றம் தடைவிதித்தது.
இதன்பேரில் செங்கல் சூளைகள் அனைத்தும் கடந்த 4 மாதங்களாக மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், சின்னத்தடாகம், பெரியதடாகம் கோவில் பிரிவுகளில் உள்ள செங்கல் சூளைகளை பாா்வையிட்டாா். பின்னா் மாங்கரை பள்ளத்துக்கு சென்ற அவா் செம்மண் தோண்டியதால் உருவாகியுள்ள மிகப்பெரிய பள்ளத்தை ஆய்வு செய்தாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் லீலா அலெக்ஸ், கோட்டாட்சியா் ரவிச்சந்திரன், கனிமவள துறையின் துணை இயக்குநா் ரமேஷ், வடக்கு வட்டாட்சியா் கோகிலாமணி, மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரி ஜெயலட்சுமி, நிலவருவாய் ஆய்வாளா் ஆகாஷ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.