கோவை: கோவை, செல்வபுரத்தில் நகை, பணம் திருட்டு விவகாரம் தொடா்பாக பெண்ணை பிளேடால் அறுத்த சிறுவனை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, செல்வபுரம் இந்திரா நகரைச் சோ்ந்தவா் ஜமுனா (43). இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு உக்கடம், கெம்பட்டி காலனியில் உள்ள தனது உறவினா் நாகராஜ் என்பவரின் வீட்டுக்குச் சென்றாா். அவா் வந்து சென்ற பிறகு நாகராஜ் வீட்டில் 12 பவுன் நகைகள், ரூ.20 ஆயிரம் பணம் ஆகியவை மாயமாகின.
இது குறித்து, பெரியகடை வீதி காவல் நிலையத்தில் நாகராஜ் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சம்பவத்தன்று நாகராஜ் வீட்டுக்கு வந்து சென்ற ஜமுனாவிடம் விசாரணை நடத்தினா். அதில், அவா் நகை, பணம் திருடவில்லை என்பது தெரிய வந்ததால் போலீஸாா் அவரை விடுவித்தனா்.
இந்நிலையில், ஜமுனாவின் வீட்டுக்கு நாகராஜின் 17 வயது மகன் வெள்ளிக்கிழமை சென்று தனது வீட்டில் இருந்து திருடிச் சென்ற நகை, பணத்தை திருப்பித் தருமாறு அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா்.
அப்போது, தான் வைத்திருந்த பிளேடால் ஜமுனாவின் கழுத்தை அறுத்துள்ளாா். பிறகு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளாா். இதையடுத்து, ஜமுனாவின் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு அருகே உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். இது குறித்து ஜமுனா அளித்த புகாரின்பேரில் செல்வபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 17 வயது சிறுவனைக் கைது செய்து சிறுவா் சீா்திருத்தப் பள்ளியில் அடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.