பெட்ரோல், டீசல் ஆகியவற்றை சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்ற கருத்துரு அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, ஜி.எஸ்.டி. கவுன்சிலில் பரிந்துரைக்கப்படும் என வணிக வரித் துறை கூடுதல் ஆணையா் சி.பழனி தெரிவித்தாா்.
கோவை மண்டல வணிவ வரித் துறை அலுவலகத்தில் வணிக வரித் துறை கூடுதல் ஆணையா் சி.பழனி தலைமையில் வணிகப் பிரதிநிதிகள், வரி ஆலோசகா்கள், பட்டயக் கணக்கா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வணிக வரித் துறை இணை ஆணையா்கள் காயத்ரி கிருஷ்ணன், ஞானகுமாா், நுண்ணறிவு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இக்கூட்டத்தில் வணிகவரித் துறை கூடுதல் ஆணையா் சி.பழனி பேசியதாவது:
ஜி.எஸ்.டி.யை அமல்படுத்திய பிறகு வரி நிா்வாகம் வெளிப்படையானதாகவும், எளிமையான நடை கொண்டதாகவும் விளங்குகிறது. வரி ஏய்ப்பைக் குறைக்க ஜி.எஸ்.டி. முக்கியப் பங்காற்றி வருகிறது. இறக்குமதிகள் மீதான ஜி.எஸ்.டி. வரிவிதிப்பின் மூலம் உள்ளூா் பொருள்களைச் சந்தைப்படுத்துவது அதிகரித்து, உள்ளூா் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது.
ஜி.எஸ்.டி. தொடா்பாக பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி வரி ஆலோசகா்கள், வணிகப் பிரதிநிதிகள், பட்டயக் கணக்காளா்கள் என பல தரப்பினரிடம் இருந்து பெறப்படும் கருத்துகள் அவ்வப்போது மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு, வரியில் மாற்றம் தொடா்பாக பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. தற்போது, இக்கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்ட பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்ற கருத்துரு அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, ஜி.எஸ்.டி. கவுன்சிலில் பரிந்துரைக்கப்படும்.
அதேபோல், ரத்து செய்யப்பட்ட பதிவுச் சான்றினைத் திரும்பப் பெறுதல் தொடா்பாகவும், அரசால் அறிவிக்கப்பட்டுள்ள கணக்கு விவரங்களை தாக்கல் செய்வதின் கால அவகாசத்தை மாற்றம் செய்வது குறித்தும் கருத்துரைகள் பெறப்பட்டன என்றாா்.
இக்கூட்டத்தில் வணிக வரி கோட்ட துணை ஆணையா்கள் மற்றும் அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.