கோவையில் புனரமைக்கப்பட்ட குளங்கள் மக்கள் பயன்பாட்டுக்குத் திறப்பு

பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் கோவையில் புனரமைக்கப்பட்ட குளங்கள் பொழுதுபோக்கு அம்சங்களுடன் மக்கள் பயன்பாட்டுக்கு வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன.
உக்கடம் பெரியகுளத்தில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் படகுத் துறையின் சாா்பில் ஏற்படுத்தப்பட்ட படகு சவாரியை துவக்கிவைக்கிறாா் மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன்.
உக்கடம் பெரியகுளத்தில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் படகுத் துறையின் சாா்பில் ஏற்படுத்தப்பட்ட படகு சவாரியை துவக்கிவைக்கிறாா் மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன்.
Updated on
1 min read

பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் கோவையில் புனரமைக்கப்பட்ட குளங்கள் பொழுதுபோக்கு அம்சங்களுடன் மக்கள் பயன்பாட்டுக்கு வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன.

கோவை மாநகராட்சியில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், செல்வசிந்தாமணி குளம் ஆகியவற்றில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி பெரியகுளத்தில் ரூ.62.17 கோடி மதிப்பில் திறந்தவெளி அரங்கம், விளையாட்டுத் திடல், உணவுக் கூடங்கள், கழிப்பறைகள், நவீன பூங்கா, படகுத் துறை, மிதவை உணவகம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. வாலாங்குளத்தில் ரூ.24.31 கோடி மதிப்பில் பாதுகாப்பு மேடை, நீரூற்று, அலங்கார நிழற்குடைகள், உணவுக் கூடங்கள் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளும், செல்வசிந்தாமணி குளத்தில் ரூ.31.47 கோடி மதிப்பில் சூரிய மின்சக்தி மேற்கூரை அமைப்புடன் கூடிய நிழல் இருக்கைகள், நிழற்குடைகள், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதேபோல, குமாரசாமி, செல்வம்பதி குளங்களில் ரூ.31.25 கோடி மதிப்பில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் தேதி குறித்த அறிவிப்பு வெள்ளிக்கிழமை மாலை அறிவிக்கப்படுவதற்கு முன்பாக பிற்பகலில் புனரமைக்கப்பட்ட பெரியகுளம், வாலாங்குளம், செல்வசிந்தாமணி குளங்கள் மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டன. இந்தக் குளங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள பொழுதுபோக்கு அம்சங்களை மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் திறந்துவைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் திறந்து வைக்கப்பட்டுள்ள குளங்களில் பொது மக்களுக்கு எந்தக் கட்டணமும் விதிக்கப்படவில்லை. கால நேரம் மட்டும் நிா்ணயிக்கப்படும். கோவை மாநகர, மாவட்ட மக்கள் குளத்தை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள ஒத்துழைக்க வேண்டும். நீா்வழிப் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடரும்.

ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்றி விட்டு குளத்தை ஒன்றிணைக்கும் நீா்வழிப் பாதைகளை செம்மைப்படுத்த பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்றாா். இதில் மாநகராட்சி துணை ஆணையா் மதுராந்தகி, முதன்மை செயல் அலுவலா் (பொலிவுறுப நகரம்) ராஜகுமாா், மாநகரப் பொறியாளா் லட்சுமணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com