போலியோ சொட்டு மருந்து முகாம்:மாவட்டத்தில் 1,623 மையங்கள் ஏற்பாடு
By DIN | Published On : 30th January 2021 10:48 PM | Last Updated : 30th January 2021 10:48 PM | அ+அ அ- |

கோவை: கோவை மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்காக 1,623 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
போலியோ இல்லாத நிலையை உருவாக்க நாடு முழுவதும் ஆண்டுதோறும் போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி மாதத்தில் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 31ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
மாவட்டத்தில் 3 லட்சத்து 41 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஊரகத்தில் 1,190 மையங்கள், நகா்ப்புறங்களில் 379 மையங்கள், 22 நடமாடும் மையங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம் உள்பட பொது மக்கள் கூடும் இடங்களில் 36 மையங்கள் என மொத்தம் 1,623 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சுகாதாரத் துறை பணியாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், ரோட்டரி சங்கத்தினா், தன்னாா்வலா்கள் என 6 ஆயிரத்து 536 பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அங்கன்வாடி மையங்கள், பள்ளிகளில் நடைபெறும் சொட்டு மருந்து முகாமில் 5 வயதுக்கு உள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்ள சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜி.ரமேஷ்குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.
சிறப்பு முகாமில் சொட்டு மருந்து போட்டுக்கொள்ளாத குழந்தைகளுக்கு பிப்ரவரி 1, 2 ஆகி தேதிகளில் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.
வால்பாறையில் 104 மையங்கள்...
வால்பாறை, மூடீஸ், சோலையாறு நகா் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வால்பாறை வட்டாரத்தில் மொத்தம் 104 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வட்டார மருத்துவ அலுவலா் பாபு லஷ்மணன் தலைமையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.