பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 07th July 2021 06:46 AM | Last Updated : 07th July 2021 06:46 AM | அ+அ அ- |

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து கோவை மாவட்ட மோட்டாா் வாகன ஓட்டுநா்கள், உரிமையாளா்கள், தொழிற்சங்கங்கள் இணைந்த ஒருங்கிணைப்பு குழுவின் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு பிஎம்எஸ் தொழிற்சங்கத்தின் நிா்வாகி நாகராஜ் தலைமை வகித்தாா். சிஐடியூ மாவட்டச் செயலா் எஸ்.கிருஷ்ணமூா்த்தி, சிஐடியூ சாலைப் போக்குவரத்து சம்மேளன பொதுச் செயலா் எஸ்.மூா்த்தி, ஏஐடியூசி கணேசன், எம்.எல்.எஃப். ஜனாா்த்தனன், சிஐடியூ அரசு போக்குவரத்துத் தொழிலாளா் சங்கத்தின் பொதுச் செயலா் வேளாங்கண்ணிராஜ், ஆட்டோ தொழிலாளா் சங்கத்தின் துணைப் பொதுச் செயலா் எம்.கே.முத்துகுமாா் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
ஆா்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல் விலை உயா்வினால் பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கு பெரிதும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே விலை உயா்வைக் குறைக்க வேண்டும். பொது முடக்கத்தால் மோட்டாா் வாகனத் தொழில் முடங்கியுள்ளது. எனவே வாகனங்களுக்கான காப்பீடு, கடன் தவணை செலுத்த அவகாசம் வழங்க வேண்டும்.
வாகனங்கள் இயக்கப்படாத காலத்துக்கு சாலை வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் ரத்து செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள வாகன ஓட்டுநா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...