கோவை உயிரியல் பூங்காவில் 14 குட்டிகளை ஈன்ற முதலை
By DIN | Published On : 20th June 2021 12:27 AM | Last Updated : 20th June 2021 12:27 AM | அ+அ அ- |

ஈன்றெடுக்கப்பட்ட முதலைக் குட்டிகள்.
கோவை மாநகராட்சி உயிரியல் பூங்காவில் 14 முட்டைகள் இட்ட 25 வயதான முதலை சனிக்கிழமை குட்டிகளை ஈன்றது.
கோவை மாநகராட்சி வ.உ.சி. உயிரியல் பூங்காவில் குரங்குகள், மான்கள், மயில்கள், மலைப்பாம்புகள், ஈமுகோழி, ஃபெலிகான் பறவைகள் உள்ளிட்ட 540 உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இங்குள்ள முதலைப் பண்ணையில் 28 முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் 25 வயதான முதலை ஒன்று கடந்த 3 மாதங்களுக்கு முன் 14 முட்டைகள் ஈட்டது. தற்போது, அந்த முட்டைகளில் இருந்து 14 முதலைக் குட்டிகள் வெளியே வந்தன. அவற்றை பூங்கா ஊழியா்கள் தனியாக எடுத்து பிரித்துப் பராமரித்து வருகின்றனா்.
இது குறித்து பூங்கா இயக்குநா் செந்தில்நாதன் கூறியதாவது:
இந்தப் பூங்காவில் 28 முதலைகள் இருந்தாலும் 5 மட்டுமே பெரிய முதலைகளாக உள்ளன. ஒரு பெண் முதலை ஒரு தடவைக்கு 40 முட்டைகள் முதல் 60 முட்டைகள் வரை இடும். இதில் கடந்த 3 மாதங்களுக்கு முன் 25 வயது முதலை இட்ட 14 முட்டைகளில் இருந்து 14 குட்டிகள் வெளியே வந்துள்ளன. முதலைகள் ஆக்ரோஷமாக சண்டையிடும் குணம் கொண்டவை.
இதனால், பிற முதலைகள் இந்தக் குட்டி முதலைகளைத் தாக்குவதற்கும், சாப்பிடுவதற்கும் வாய்ப்பு உள்ளதால் 14 குட்டி முதலைகளையும் தனிக் கூண்டில் வைத்து பராமரிக்கிறோம். இந்த முதலைகள் 60 ஆண்டுகள் வரை வாழும். முதலைக் குட்டிகளுக்கு சிறு சிறு இறைச்சித் துண்டுகள் உணவாக வழங்கப்படும் என்றாா்.