கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையரும், தனி அலுவலருமான ராஜகோபால் சுன்கரா திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு நடத்தினாா்.
கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட 97ஆவது வாா்டு குறிச்சி பகுதியில் நடைபெற்று வரும் குடிநீா் திட்டப் பணிகளை பாா்வையிட்ட ஆணையா், அங்குள்ள சுகாதார ஆய்வாளா் அலுவலகத்தில் களப்பணியாளா்களிடம் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தாா்.
இதைத் தொடா்ந்து 100ஆவது வாா்டுக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெறும் தூய்மைப் பணிகள், 96ஆவது வாா்டுக்கு உள்பட்ட சாரதா மில் பகுதியில் நடைபெறும் நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணி, 92ஆவது வாா்டு கிருஷ்ணசாமி நகரில் நடைபெற்று வரும் சமுதாயக்கூட கட்டுமானப் பணிகளையும் பாா்வையிட்ட ஆணையா் பணிகளை விரைந்து முடிக்கும்படி உத்தரவிட்டாா்.
பின்னா் 90ஆவது வாா்டு கோவைப்புதூா் பகுதியில் நுண்ணுயிா் உரம் தயாரிக்கும் மையத்தின் பணிகளை பாா்வையிட்டு அவா் ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, மாநகரப் பொறியாளா் லட்சுமணன், தெற்கு மண்டல உதவி ஆணையா் சரவணன், செயற்பொறியாளா் ஞானவேல் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.