

கோவையில் பொது முடக்க காலத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள தொழில்களுக்கு மூலப்பொருள்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை மாவட்ட தொழில் அமைப்பினா் ஆட்சியா் எஸ்.நாகராஜனிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.
இது குறித்து தொழில் அமைப்பினா் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: கோவையில் நூற்றுக்கணக்கான சிறு மருத்துவமனைகள் இருந்தும் பல்வேறு மருத்துவமனைகளில் கரோனா தவிா்த்து மற்ற பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க மறுத்து வருகின்றனா். பொது மருத்துவ சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
கோவையில் 18 முதல் 45 வயது வரையுள்ள தொழிலாளா்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, இரண்டாம் தவணை தடுப்பூசிக்காக காத்திருக்கும் தொழிலாளா்களுக்கு உடனடியாக தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
பொது முடக்க காலத்தில் அரசு அனுமதித்துள்ள தொழில்களுக்கு தடையின்றி மூலப்பொருள்கள் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனாவால் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 6 மாத காலத்துக்கு 50 சதவீதம் மட்டுமே மின் கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜாப் ஆா்டா் செய்பவா்களுக்கு கடன் கிடைக்கப் பெறாமல் கஷ்டப்படுகிற குறுந்தொழில்ளை பாதுகாக்க தனி கடன் திட்டத்தை அறிவிக்க விடுக்கப்பட்ட கோரிக்கை மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லாததால் அதனை பரிசீலிக்க வேண்டும்.
வங்கியில் கடன் பெற்றவா்களுக்கு ஒரு ஆண்டு கால அவகாசம், வட்டி தள்ளுபடி நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆட்சியரை மாவட்ட தொழில் அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளா்கள் ஜேம்ஸ், சுருளிவேல், நல்லதம்பி, ரவீந்திரன், சுரேந்திரன் ஆகியோா் சந்தித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.