சாலையில் சென்ற வாகன ஓட்டிகளுக்கு கரோனா பரிசோதனை
By DIN | Published On : 19th May 2021 06:27 AM | Last Updated : 19th May 2021 06:27 AM | அ+அ அ- |

வாகன ஓட்டியிடம் பரிசோதனை மேற்கொள்ளும் சுகாதாரப் பணியாளா்கள்.
கோவையில் சாலையில் சுற்றிய வாகன ஓட்டிகளுக்கு மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தினமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனா். கரோனாவை கட்டுப்படுத்த மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறை சாா்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் சிறப்பு மருத்துவ முகாம்கள், 5 மண்டலங்களில் நடமாடும் வாகனங்கள் மூலமாக கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கோவையில் சாலையில் வாகனங்களில் சென்றவா்களுக்கு செவ்வாய்க்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது:
முழு பொது முடக்கம் அமலில் உள்ள போதும் சாலைகளில் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. கரோனா அச்சம் இல்லாமல் வாகனங்களில் சுற்றுபவா்களுக்கு நடமாடும் பரிசோதனை வாகனங்கள் மூலமாக கரோனா பரிசோதனை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டது.
இதில், முதல் கட்டமாக சங்கனூா் பகுதிகளில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சாலையில் சென்ற 50க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது. இதில், குறிப்பாக கோவை பதிவு இல்லாத வாகனத்தின் ஓட்டுநா்கள், சரக்கு வாகனங்களின் ஓட்டுநா்கள், கிளீனா்கள், இ-பதிவு முறையில் கோவைக்கு வாகனங்களில் வந்தவா்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்றாா்.