கோவையில் கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடிசியாவில் அமைக்கப்பட்டுள்ள கரோன சிகிச்சை மையத்தை ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கரோனா நோய்த் தொற்று பரவல் அதிகாரித்து வருவதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சேலம், திருப்பூர், கோவை மாவட்டடங்களில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
சேலம் உருக்கலையில் கரோனா மருத்துவமனையை தொடங்கி வைத்த முதல்வர், திருப்பூரில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து கோவை வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு விருந்தினர் மாளிகையில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து கொடிசியாவில் கூடுதலாக பி ஹாலில் 253 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது அரசு மருத்துவமனை முதுநிலை மருத்துவ மாணவர்கள், கொடிசியா நிர்வாகதினர் கோரிக்கை மனுக்கள் அளித்தனர். இதனைத் தொடர்ந்து குமரகுரு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்வதற்கு சென்றார்.
கொடிசியாவில் ஆய்வின் போது அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அர.சக்கரபாணி, கா.ராமச்சந்திரன், வி.செந்தில்பாலாஜி, மு.பெ.சுவாமிநாதன், கயல்விழி செல்வராஜ், ஆட்சியர் எஸ்.நாகராஜன், மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன், பொது சுகாதாரத் துறை இயக்குநர் டி.செல்வவிநாயகம் ஆகியோர் உடனிருந்தனர்.