கோவையில் மேற்குத்தொடர்ச்சி மலையில் தொடரும் கனமழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி கடந்த சில நாள்களாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. கோவையிலும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது. மேலும் கடந்த இரண்டு நாள்களாக விடாமல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. கோவை குற்றாலம், நொய்யல் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நொய்யலில் உள்ள சித்திரைச்சாவடி, புட்டுவிக்கி அணைக்கட்டுகளில் மழை நீர் ஆர்ப்பரித்து செல்கிறது. நொய்யலில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் நொய்யல் ஆற்றை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்து குளங்கள் வேகமாக நிரம்பி வருகிறது.