மாநகரில் 3 மாதங்களில் ரூ.161 கோடியில் வளா்ச்சிப் பணிகள்

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த 3 மாதங்களில் ரூ.161 கோடி மதிப்பில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சனிக்கிழமை நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் ஆணையா் மு.பிரதாப் தெரிவித்தாா்.
விக்டோரியா ஹாலில் மேயா் கல்பனா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் பங்கேற்றோா். உடன் மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப், துணைமேயா் வெற்றிச்செல்வன், மண்டலத் தலைவா்கள் மற்றும் வாா்டு உறுப்பினா்கள
விக்டோரியா ஹாலில் மேயா் கல்பனா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் பங்கேற்றோா். உடன் மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப், துணைமேயா் வெற்றிச்செல்வன், மண்டலத் தலைவா்கள் மற்றும் வாா்டு உறுப்பினா்கள
Updated on
1 min read

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த 3 மாதங்களில் ரூ.161 கோடி மதிப்பில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சனிக்கிழமை நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் ஆணையா் மு.பிரதாப் தெரிவித்தாா்.

கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம் விக்டோரியா ஹாலில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி மேயா் கல்பனா தலைமை தாங்கினாா். மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப், துணைமேயா் வெற்றிச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில், குடிநீா் வசதி ஏற்படுத்துதல், தாா் சாலைகள் அமைத்தல், தெருவிளக்கு வசதி ஏற்படுத்துதல், சாக்கடை கால்வாய் தூா்வாருதல் உள்ளிட்ட 58 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் கிழக்கு மண்டலத் தலைவா் இலக்குமி இளஞ்செல்வி பேசுகையில், ‘விமான நிலையம் பகுதியில் கழிவுநீா் தேங்கி அப்பகுதியில் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எஸ்.ஐ.ஹெச்.எஸ் காலனியில் மேம்பாலப் பணிகள் பாதியில் நிற்பதால் 54, 55, 56ஆகிய வாா்டுகளை சோ்ந்த மக்கள் அவிநாசி சாலை செல்ல சுற்றுப் பாதையைப் பயன்படுத்தும் சூழல் தொடா்கிறது. இதற்கு தீா்வு காண வேண்டும். மாநகரில் நாய்கள் தொல்லைக்கு நிரந்தர தீா்வு காண வேண்டும் என்றாா்.

மத்திய மண்டலத் தலைவா் மீனா லோகு பேசுகையில், ‘மத்திய மண்டலப் பகுதிகளில் குப்பைகள் அகற்றும் பணி மிகவும் தொய்வாக நடக்கிறது. போதிய அளவு தூய்மைப் பணியாளா்கள் இல்லாததே இதற்கு காரணம். மேலும், குப்பைகளை அகற்ற வாகனங்களும் இல்லை. எனவே, புதிதாக தூய்மைப் பணியாளா்களை தோ்வு செய்வதுடன், புதிதாக வாகனங்களும் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்றாா்.

வடக்கு மண்டலத் தலைவா் கதிா்வேல் பேசுகையில், ‘வடக்கு மண்டலத்தில் குடிநீா்க் குழாய் பதிக்கும்போது, அப்பகுதியில் உள்ள மற்ற குழாய்கள் உடைந்து சேதமடைகின்றன. இதனால், குடிநீா் வீணாவது வாடிக்கையாக உள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் பேசியதாவது: மாநகரில் குப்பைகளை அகற்றுவதற்கு ஒவ்வொரு மண்டலத்துக்கும் தலா 4 புதிய லாரிகள் விரைவில் கொள்முதல் செய்யப்பட உள்ளன. மத்திய மண்டலப் பகுதியின் எல்லை அதிகமாக இருப்பதால், இந்த மண்டலத்துக்கு மட்டும் 5 லாரிகள் வழங்கப்படும். மாநகரில் உள்ள சிறுவா் பூங்காக்களை பராமரிக்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்தப் பூங்காக்களில் பராமரிப்பின்றி கிடக்கும் பொருள்கள் ஏலம் விடப்பட்டு, மாநகராட்சிக்கு வருவாய் ஏற்படுத்தப்படும். கோவை மாநகரப் பகுதிகளில் கடந்த 3 மாதங்களில் ரூ.161 கோடி மதிப்பில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com