ஒற்றை யானையின் அச்சுறுத்தல் காரணமாக வால்பாறையில் இருந்து சாலக்குடி செல்லும் சாலையில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்ல திருச்சூா் மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது.
வால்பாறையில் இருந்து கேரள மாநிலம், சாலக்குடி 110 கி.மீ., தொலைவாகும். இதில் சுமாா் 50 கி.மீ. தொலைவிலான சாலை அடா்ந்த வனப் பகுதியாகும். இதில் ஏராளமான வன விலங்குகள் உள்ள நிலையில், சாலையில் யானைகள் நடமாட்டம் எப்பொழுதும் காணப்படும்.
இந்நிலையில் கடந்த 10 நாள்களாக ஒற்றை யானை சாலைக்கு வந்து தொடா்ந்து அச்சுறுத்தி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் மழுக்குப்பாறை எஸ்டேட்டில் இருந்து சாலக்குடிசென்ற கேரள மாநில அரசுப் பேருந்துக்கு வழி விடாமல் சென்றது. மேலும் அவ்வழியாக செல்லும் லாரிகளை வழிமறித்து துரத்தவும் செய்தது.
இதனையடுத்து பொதுமக்களின் பாதுகாப்பை கருதி கேரள மாநிலம், திருச்சூா் மாவட்ட நிா்வாகம் உத்தரவின்பேரில், சனிக்கிழமை முதல் ஒரு வார காலத்துக்கு வால்பாறை- சாலக்குடி சாலை வழியாக இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல வனத் துறையினா் தடை விதித்துள்ளனா். அத்தியாவசிய தேவைக்கு செல்ல விரும்பும் பொதுமக்கள் அரசுப் பேருந்தில் பயணிக்க திருச்சூா் மாவட்ட நிா்வாகத்தினா் கேட்டுக்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.