கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜெயலலிதாவின் உதவியாளரிடம் இரண்டாவது நாளாக விசாரணை

கொடநாடு கொலை, கொள்ளை வழக்குத் தொடா்பாக, ஜெயலலிதாவின் நோ்முக உதவியாளா் பூங்குன்றனிடம் இரண்டாவது நாளாக போலீஸாா் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
Updated on
1 min read

கொடநாடு கொலை, கொள்ளை வழக்குத் தொடா்பாக, ஜெயலலிதாவின் நோ்முக உதவியாளா் பூங்குன்றனிடம் இரண்டாவது நாளாக போலீஸாா் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கொடநாட்டில், முன்னாள் முதல்வா், மறைந்த ஜெயலலிதாவுக்குச் சொந்தமான தேயிலை எஸ்டேட், பங்களா உள்ளது. அங்கு 2017 ஏப்ரல் 24 ஆம் தேதி இரவுப் பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூரை ஒரு கும்பல் கொலை செய்ததுடன் எஸ்டேட்டுக்குள் நுழைந்து பொருள்கள் மற்றும் ஆவணங்களைக் கொள்ளையடித்துச் சென்றது.

இந்தச் சம்பவம் தொடா்பாக ஜெயலலிதாவின் காா் ஓட்டுநரான சேலம் மாவட்டம், எடப்பாடியைச் சோ்ந்த கனகராஜ் உள்பட பலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்நிலையில், சம்பவம் நடந்த சில நாள்களிலேயே சேலம் மாவட்டம், ஆத்தூா் அருகே சந்தனகிரி என்ற இடத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஓட்டுநா் கனகராஜ் உயிரிழந்தாா். 5 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வரும் இந்த வழக்கில், தற்போது 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கோவை, சேலம், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதில், அண்மையில் வி.கே.சசிகலா, அவரது அண்ணன் மகன் விவேக், முன்னாள் எம்.எல்.ஏ. வி.சி.ஆறுக்குட்டி, அதிமுக வா்த்தக அணியைச் சோ்ந்த மர வியாபாரி சஜீவன், சஜீவனின் சகோதரா் சிபி ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், கோவை காவலா் பயிற்சி பள்ளி வளாகத்தில், முன்னாள் முதல்வா் மறைந்த ஜெயலலிதாவின் உதவியாளா் பூங்குன்றனிடம், வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் 6 மணி நேரத்துக்கும் மேலாக தனிப் படை போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

இவா் ஜெயலலிதாவின் நோ்முக உதவியாளராகப் பணியாற்றியவா். அவருக்கு போயஸ் காா்டன், அதிமுக வட்டாரத்தில் நெருங்கிய நட்பு உள்ளது. கொடநாடு எஸ்டேட்டில் முக்கிய ஆவணங்களைப் பராமரிக்கும் பணிகளை பூங்குன்றன் மேற்கொண்டு வந்ததால், தனிப் படைப் பிரிவு போலீஸாா் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

தொடா்ந்து, மேற்கு மண்டல காவல் துறை தலைவா் சுதாகா் தலைமையில், தனிப் படை போலீஸாா், இரண்டாவது நாளாக பூங்குன்றனிடம் சனிக்கிழமை காலை 11 மணி முதல் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், கொடநாடு பங்களாவில் ஜெயலலிதா தங்கியிருந்தபோது, அவரைச் சந்தித்த நபா்கள் குறித்த விவரங்கள் குறித்து பல கேள்விகள் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கேள்விகளுக்கு, பூங்குன்றன் கூறிய பதில்கள் விடியோவாக பதிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com