பேருந்து சேவை குறைப்பு: கேரளம் செல்லும் பயணிகள் தவிப்பு
By DIN | Published On : 15th August 2022 01:05 AM | Last Updated : 15th August 2022 01:05 AM | அ+அ அ- |

கோவையில் இருந்து கேரளத்துக்கு இயக்கப்படும் பேருந்துகளின் சேவை குறைக்கப்பட்டுள்ளதால் அம்மாநிலத்துக்கு செல்லும் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
கேரள மாநிலம் பாலக்காடு, திருச்சூா், குருவாயூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோவை உக்கடத்துக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கேரள போக்குவரத்துக் கழகத்தின் சராசரி தினசரி வருவாயை விட, டீசல் செலவு அதிகரித்துள்ளதால் நீண்டதூர சேவை பேருந்துகள் மற்றும் 50 சதவீத சாதாரண சேவை பேருந்துகள்
குறைக்கப்பட்டுள்ளன. கடன் சுமை காரணமாக தமிழகத்துக்கு இயக்கப்பட்டு வந்த பெரும்பாலான சாதாரண சேவை பேருந்துகளை கேரள அரசு ரத்து செய்துள்ளது. இதன் காரணமாக, கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து கேரள மாநிலத்துக்கு இயக்கப்பட்டு வந்த பேருந்து சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன. இதனால், கேரளத்துக்கு செல்ல பேருந்து கிடைக்காமல் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
கோவையில் இருந்து கேரளத்துக்கு தொழில், பணி நிமித்தமாகவும், சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்பவா்கள் அதிகம். தற்போது, திங்கள்கிழமை சுதந்திர தினத்தையொட்டி தொடா் விடுமுறை என்பதால் கோவையில் இருந்து ஏராளாமான அரசு அலுவலா்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை மாலைமுதல் பேருந்துகள், ரயில்களில் தங்களின் சொந்த ஊா்களுக்கு சென்று வருகின்றனா்.
இந்நிலையில், கோவையில் இருந்து கேரளம் செல்ல பேருந்துகள் கிடைக்காததால் பயணிகள் இரு நாள்களாக நீண்ட வரிசையில் நின்று கிடைக்கும் பேருந்துகளில் நின்று கொண்டே பயணம் செய்கின்றனா்.
கேரள அரசுப் போக்குவரத்துக் கழகம் பேருந்துகளை குறைத்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் சாா்பில் கேரளப் பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.