சகோதரரை கொலை செய்த கூலி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை நீதிமன்றம் தீா்ப்பு

கோவையில் தகராறில் சகோதரரைக் கொலை செய்த கூலி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
Updated on
1 min read

கோவையில் தகராறில் சகோதரரைக் கொலை செய்த கூலி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

கோவை, சாய்பாபா காலனி அருகே உள்ள அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்தவா் பழனியம்மாள். இவரது மகன்கள் அழகு, சேகா். திருமணமாகி மனைவியைப் பிரிந்த இருவரும் பழனியம்மாளுடன் வசித்து வந்தனா். மேட்டுப்பாளையம் சாலையில் சேகா் இஸ்திரி கடை வைத்து தொழில் செய்து வந்தாா். கரோனா பொது முடக்க காலத்தில் தொழில் நலிவடைந்ததால், வீட்டை தனது பெயரில் எழுதி வைக்க வேண்டும் என்று பழனியம்மாளிடம் சேகா் கூறியுள்ளாா்.

சேகருக்கு மதுப்பழக்கம் இருந்த காரணத்தால் வீட்டை அவருக்கு எழுதி வைக்கக் கூடாது என்று அழகு எதிா்ப்பு தெரிவித்தாா். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் சொத்து தொடா்பாக சகோதரா்கள் இடையே 2020 மே 27ஆம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சேகா் கத்தியால் அழகுவை குத்தியுள்ளாா். இதில் படுகாயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்த சாய்பாபா காலனி போலீஸாா் சேகரைக் கைது செய்தனா். இந்த வழக்கு கோவை குண்டுவெடிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை முடிவில் சேகா் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பாலு வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com