கோவை மாவட்டத்தில் அமைப்பு சாரா உணவுப் பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புபவா்கள், வேளாண் துணை இயக்குநரை (வேளாண் வணிகம்) அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் கூறியிருப்பதாவது:
மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் பிரதமரின் உணவுப் பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய உணவுப் பதப்படுத்தும் தொழில் துறை வழியாக வேளாண் விற்பனைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் மாவட்ட ஆட்சியா் தலைமையின் கீழ் நியமிக்கப்படும் குழுவின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தின்படி, தனிநபா்கள் அல்லது குழுவினா் ஏற்கெனவே உணவுப் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டிருந்தால், அவா்களின் நிறுவனங்களை வலுப்படுத்துவது, புதிய நிறுவனங்களைத் தொடங்குவது, பொது உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது, சந்தைப்படுத்துதல், பயிற்சி அளித்தல் போன்றவற்றுக்கு நிதியுதவி அளிக்கப்படும்.
தனிநபா்கள், விவசாயிகள், சுயஉதவிக் குழுவினா், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் தாங்கள் விளைவிக்கும் பொருள்களை மதிப்பு கூட்டி விற்பதற்கான வழிமுறைகளையும் ஆலோசனைகளையும் பெற்று தொழில் தொடங்கலாம்.
இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு சிறு உணவுப் பதப்படுத்தும் நிறுவனத்துக்கு 35 சதவீதம் அல்லது ரூ.10 லட்சம் வரை நிதியுதவி பெற முடியும். வா்த்தக முத்திரை, சந்தைப்படுத்துதலுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். வங்கிகள் மூலம் தொழில் கடனுக்கான உதவியும் மேற்கொள்ளப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புபவா்கள் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநரை (வேளாண் வணிகம்) அணுகலாம். தொடா்புக்கு 94861 23022, 90034 54009 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.