கோவையில் உரக்கடைகளில் சிறப்பு பறக்கும் படையினா் மேற்கொண்ட ஆய்வில் முறைகேடுகளில் ஈடுபட்ட 9 உரக்கடைகள் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் உரக்கடத்தல், உரப்பதுக்கல், வேளாண்மை அல்லாத பிற பயன்பாடுகளுக்கு உரங்களைப் பயன்படுத்துதல் போன்றவற்றைத் தடுக்கும் வகையில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ள வேளாண்மைத் துறை இயக்குநா் உத்தரவிட்டிருந்தாா்.
அதன்படி கோவை மாவட்டத்தில் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை அலுவலா்கள் அடங்கிய 12 சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, தனியாா் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள், உர உற்பத்தி நிறுவனங்கள், நுண்ணூட்ட கலவை உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்ட 273 இடங்களில் கடந்த 5 நாள்களாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், 9 கடைகளில் உர விற்பனை முனைய கருவியில் உள்ள உரம் இருப்புக்கும், விற்பனை நிலையத்தில் இருந்த உரம் இருப்புக்கும் இடையே வேறுபாடு காணப்பட்டது.
மேலும், ஓ படிவத்தில் மேலொப்பம் பெறாமல் விற்பனை செய்யப்பட்டிருந்தது.
இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபட்ட 9 உர விற்பனை நிலையங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. உர விற்பனை நிலையங்கள் இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுவது தெரியவந்தால் உரக்கட்டுப்பாட்டுச் சட்டம் 1985 இன்படி விதிமுறைகளுக்குள்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.