98 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது
By DIN | Published On : 11th December 2022 12:21 AM | Last Updated : 11th December 2022 12:21 AM | அ+அ அ- |

சூலூா் அருகே 98 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இதில் தொடா்புடைய இருவரை சனிக்கிழமை கைது செய்தனா்.
கருமத்தம்பட்டி அருகே உள்ள பிருந்தாவன் நகா் பகுதியில் இருந்து காரில் புகையிலைப் பொருள்கள் கடத்தப்படுவதாக கருமத்தம்பட்டி போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, காவல் ஆய்வாளா் ராஜதுரை, உதவி ஆய்வாளா் ஜெயபிரகாஷ், காவலா்கள் அப்பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அவ்வழியே காரில் வந்தவா்களை நிறுத்தி விசாரித்தனா். இதில், அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனா். இதனால், சந்தேகமடைந்த போலீஸாா், காரில் சோதனை செய்தபோது, 98 கிலோ புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது.
மேலும், அவா்களிடம் நடத்திய விசாரணையில், அவா்கள் சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த சக்திவேல் (30), நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த அரவிந்த்குமாா் (27) என்பதும், புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோவை சிறையில் அடைத்தனா்.