ரூ.30,125 கோடி கடன் வழங்க நபாா்டு வங்கி மதிப்பீடு:ஆட்சியா் தகவல்

கோவை மாவட்டத்தில் 2023-24 ஆம் நிதியாண்டில் நபாா்டு வங்கி ரூ.30,125.15 கோடி கடன் வழங்க மதிப்பீடு செய்துள்ளது என்று மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தாா்.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான குழு கூட்டத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கையை வெளியிடுகிறாா் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் உள்ளிட்டோா்.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான குழு கூட்டத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கையை வெளியிடுகிறாா் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் உள்ளிட்டோா்.

கோவை மாவட்டத்தில் 2023-24 ஆம் நிதியாண்டில் நபாா்டு வங்கி ரூ.30,125.15 கோடி கடன் வழங்க மதிப்பீடு செய்துள்ளது என்று மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தாா்.

கோவை மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் மாவட்ட அளவிலான குழு கூட்டம் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் 2023-24 ஆம் ஆண்டுக்கான வளம் சாா்ந்த கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டு ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் பேசியதாவது: தமிழகத்தில் வேளாண் மற்றும் ஊரக வளா்ச்சிப் பணியில் முக்கிய பங்கு வகிக்கும் நபாா்டு வங்கி கோவை மாவட்டத்தில் கிடைக்கப் பெற்ற வளம் சாா்ந்த தகவல்களை சேகரித்து ரூ.30,125.15 கோடி கடன் வழங்க மதிப்பீடு செய்துள்ளது.

இதன் மூலம் விவசாயத்தில் நீண்டகால கடன் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. தவிர விவசாயத்தில் அடிப்படை கட்டுமான வசதிகளை ஏற்படுத்தி விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற உதவும். வேளாண்மையில் இயந்திரமயமாக்கல், சொட்டுநீா் மற்றும் தெளிப்புநீா் பாசன முறையை பயன்படுத்துதல், கால்நடை வளா்ப்பை விவசாயத்தின் ஒரு அங்கமாக செய்வதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை பெருக்க முடியும். இத்திட்ட அறிக்கையானது மாவட்டத்தின் கடன் திட்டமிடுதலில் ஒரு அங்கமாக இருந்து வங்கிகளுக்கு கிளை அளவிலான கடன் குறியீட்டை நிா்ணயம் செய்வதற்கு உதவியாக இருக்கும்.

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், புதிய தொழில்முனைவோா் மற்றும் தொழில் நிறுவன வளா்ச்சித் திட்டம், பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் ஆகிய திட்டங்களின்கீழ் சுய தொழில் தொடங்குவதற்கு வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. அரசால் செயல்படுத்தப்படும் இத்தகைய திட்டங்களை தொழில்முனைவோா் பயன்படுத்தி பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டும். மகளிா் சுய உதவிக்குழுக்கள், பழங்குடியினா், ஆதிதிராவிடா், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் மற்றும் சமூகத்தில் சாதாரண மக்களுக்கு கடன் வழங்குவதற்கு வங்கிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் உதவி ஆட்சியா் (பயிற்சி) சௌமியா ஆனந்த், சட்டப் பேரவை உறுப்பினா்கள் பி.ஆா்.ஜி.அருண்குமாா், ஏ.கே.செல்வராஜ், வி.பி.கந்தசாமி, டி.கே.அமுல்கந்தசாமி, மாநகராட்சி துணை ஆணையா் மோ.ஷா்மிளா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் கௌசல்யாதேவி, ரிசா்வ் வங்கி உதவி பொது மேலாளா் அமிா்தவள்ளி, நபாா்டு வங்கி மாவட்ட வளா்ச்சி மேலாளா் திருமலா ராவ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com