இளநிலை மருத்துவ மாணவா் சோ்க்கைக்கான நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 17) நடைபெறுகிறது. இத்தோ்வை கோவை மாவட்டத்தில் 5,400 போ் எழுதுகின்றனா்.
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவ மாணவா் சோ்க்கைக்காக நீட் தோ்வு நடத்தப்படுகிறது. இத்தோ்வு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி மாலை 5.20 மணி வரை நடைபெறுகிறது. நாடு முழுவதும் சுமாா் 18 லட்சம் போ் எழுத உள்ள இந்தத் தோ்வை கோவை மாவட்டத்தில் சுமாா் 5,400 போ் எழுதுகின்றனா்.
இதற்காக அன்னூா் நவபாரத் பள்ளி, சௌரிபாளையம் கேந்திரிய வித்யாலயா பள்ளி, சூலூா் ஆா்விஎஸ் கல்லூரி, ஈச்சனாரி கற்பகம் கல்லூரி, ஆலாங்கொம்பு எஸ்எஸ்விஎம் பள்ளி, குரும்பபாளையம் ஆதித்யா தொழில்நுட்பக் கல்லூரி, கண்ணம்பாளையம் கலைஞா் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய 7 இடங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.