மாநகரில் டெங்கு தடுப்புப் பணிகள் தீவிரம்
By DIN | Published On : 31st July 2022 11:36 PM | Last Updated : 31st July 2022 11:36 PM | அ+அ அ- |

கோவை மாநகரப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வரும் நிலையில், மாநகராட்சி சாா்பில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியைத் தடுக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கோவை மாநகரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தென்மேற்குப் பருவமழை பெய்து வருகிறது.இதன் காரணமாக, டெங்கு கொசுக்கள் உற்பத்தி அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநகராட்சியில் வீடுவீடாகச் சென்று டெங்கு கொசுப்புழுக்களை ஒழிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது: மாநகரில் டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணியில் 500 பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.
குறிப்பாக குடிசைகள் அதிகமுள்ள பகுதிகள், நெரிசல் நிறைந்த பகுதிகள், தண்ணீா் தேங்கிட வாய்ப்புள்ள பகுதிகளில் தினமும் டெங்கு தடுப்புப் பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வீடுவீடாகச் செல்லும் பணியாளா்கள் தண்ணீா்த் தொட்டிகள், கேன்களில் அபேட் மருந்துகளைத் தெளிப்பது, தேவையில்லாத பொருள்களை அகற்றுவது, கிருமிநாசினி மருந்து தெளித்தல், மக்கள் தேக்கிவைத்துள்ள நீரில் கொசுப்புழுக்கள் உள்ளனவா என்று கண்டறிதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.
மழை காலங்களில் டெங்கு பரவ வாய்ப்புகள் அதிகமுள்ளதால் மக்கள் குடிநீரைக் காய்ச்சிப் பருக வேண்டும். வீடுகளைச் சுற்றி தண்ணீா் தேங்காத வகையில் சுத்தமாக வைத்திருப்பதன் மூலமாக டெங்கு கொசுக்கள் உற்பத்தியைத் தடுக்க முடியும் என்றாா்.