கோவை: பிரத்யேக திட்டம் மூலம் ரூ.2.87 லட்சம் அபராதம் வசூல்
By DIN | Published On : 09th June 2022 12:33 PM | Last Updated : 09th June 2022 12:33 PM | அ+அ அ- |

கோவை: கோவை மாநகரக் காவல் துறையில் பிரத்யேக திட்டத்தின் மூலம் ரூ.2.87 லட்சம் அபராதத் தொகை வசூல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை மாநகரக் காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் நடப்பாண்டு மாா்ச் வரையிலான காலகட்டத்தில் , கோவை மாநகரில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, அதை செலுத்தாதவா்களைத் தொடா்பு கொண்டு வழக்குகளை முடிவுக்கு கொண்டு வர, ஒரு சிறப்பு செயல் திட்டம் மாநகரக் காவல் துறையினரால் வகுக்கப்பட்டது.
அதன்படி, கடந்த மாதம் 27-ஆம் தேதி முதல் , மாநகர கிழக்கு மற்றும் மேற்கு பகுதி காவல் துறை உதவி ஆணையா் அலுவலகங்களில் தலா 3 பெண் காவலா்களை நியமித்து அபராதத் தொகை கட்டாத நபா்களை அவா்களது கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொண்டு, அத்தொகையை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.
இதன் பலனாக 5,629 போக்குவரத்து விதிமீறல் வழக்குகளில் அபராதத் தொகை ரூ.2 லட்சத்து 87 ஆயிரத்து 200 தொகை செலுத்தப்பட்டுள்ளது.
இப்பணி தினமும் உயரதிகாரிகளால் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கோவை மாநகரில் போக்குவரத்து காவலா்கள் தற்போது இரவு 10 மணி வரை பணியில் உள்ளனா். எனினும், கோவை மாநகரில் மேம்பாலம் கட்டும் பணி, சாலை விரிவாக்கப் பணி போன்றவை நடைபெறுவதாலும், திருமணம் போன்ற விஷேச நாள்களிலும், விடுமுறை, பண்டிகை நாள்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் லட்சுமி மில் சந்திப்பு, ஆம்னி பேருந்து நிறுத்தம் பகுதி,பழைய மேம்பாலம் ரவுண்டானா பகுதி,
லாலி சாலை சந்திப்பு, ஆத்துப்பாலம் சந்திப்பு, உக்கடம் 5 முக்கு சந்திப்பு, சுந்தராபுரம் சந்திப்பு, ஒப்பணக்கார வீதி - போத்தீஸ் சந்திப்பு, கோவை ரயில் நிலையம், காந்திபுரம் சிக்னல் சந்திப்பு ஆகிய 10 இடங்களில் இரவு 11 மணி வரை போக்குவரத்து காவலா்கள் பணிபுரிய மாநகரக் காவல் ஆணையா் உத்தரவிட்டுள்ளாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...