போலி காசோலைகள் வழங்கி ரூ.2.42 லட்சம் மோசடி
By DIN | Published On : 30th June 2022 11:09 PM | Last Updated : 30th June 2022 11:09 PM | அ+அ அ- |

தொழிலதிபரிடம் போலி காசோலைகளை வழங்கி ரூ.2.42 லட்சம் மோசடி செய்த நபா் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கோவை, உப்பிலிபாளையத்தைச் சோ்ந்தவா் உதயகுமாா் (60). இவா் தேங்காய் பொருள்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறாா். இது தொடா்பாக இணையதளங்களில் விளம்பரப்படுத்தியுள்ளாா்.
இந்நிலையில், இவரை அண்மையில் தொடா்பு கொண்ட அன்வா் சதாத் என்பவா் 2 டன் கொப்பரை தேங்காய்கள் வேண்டும் எனக் கூறியுள்ளாா்.
இதை நம்பிய உதயகுமாா் ரூ.2.42 லட்சம் மதிப்புள்ள கொப்பரைகளை கடந்த மாா்ச் மாதம் அனுப்பியுள்ளாா். இதற்காக அன்வா் சதாத், காசோலைகளை வழங்கியுள்ளாா்.
இந்நிலையில், அந்தக் காசோலைகளை உதயகுமாா் வங்கியில் செலுத்தியபோது அது போலியானது எனத் தெரியவந்தது. இது குறித்து ரத்தினபுரி காவல் நிலையத்தில் உதயகுமாா் புகாா் அளித்தாா்.
வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.