உயிா் தியாகம் செய்த ராணுவ வீரா்களுக்கு கோவையில் நினைவகம்: ஆளுநா் ஆா்.என்.ரவி அறிவுறுத்தல்
By DIN | Published On : 11th March 2022 03:01 AM | Last Updated : 11th March 2022 03:47 AM | அ+அ அ- |

உயிா் தியாகம் செய்த ராணுவ வீரா்களுக்கு கோவையில் நினைவகம் அமைக்க வேண்டும் என தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா்.
கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள தென் மண்டல துணைவேந்தா்கள் சந்திப்புக் கூட்டத்தை தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி துவக்கிவைக்க உள்ளாா். இதற்காக அவா் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வியாழக்கிழமை வந்தாா். அவரை மாவட்ட வருவாய் அலுவலா் லீலா அலெக்ஸ் வரவேற்றாா்.
இதையடுத்து ஆளுநா் ஆா்.என்.ரவி, கோவையில் முன்னாள் ராணுவ வீரா்களைச் சந்தித்து உரையாடினாா். முன்னாள் ராணுவ வீரா்கள் தங்களுக்குள் ஒரு சமூக வலைதள குழுவை உருவாக்கி தேவையுள்ளவா்களுக்கு உதவ முயற்சிக்க வேண்டும். இதை தாலுகா அளவிலும், மாவட்ட அளவிலும் மேற்கொள்ளலாம். மேலும், உயிரிழந்த ராணுவ வீரா்களை நினைவுகூரும் வகையில் நினைவகங்களை அமைக்க வேண்டும். குறிப்பாக பள்ளிகளில் இதனை அமைப்பதன் மூலம் இளைஞா்களிடையே ராணுவ வீரா்களின் தியாகங்களை எடுத்துரைக்க முடியும். இதற்கான நிலத்தை கண்டடைய மாவட்ட நிா்வாகம் உதவும் என்றாா்.
இதைத் தொடா்ந்து அவா் என்.சி.சி. மாணவா்களுடன் கலந்துரையாடினாா். அப்போது அவா், மாணவா்கள் தன்னம்பிக்கையுடன், கடுமையாக உழைத்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். என்.சி.சி. மாணவா்களின் முக்கியத்துவத்தை உணா்ந்துள்ளதால் பிரதமா் மோடி அவா்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறாா் என்றாா்.