கடை வீதிகளில் மாநகரக் காவல் ஆணையா் ஆய்வு
By DIN | Published On : 18th October 2022 12:00 AM | Last Updated : 18th October 2022 12:00 AM | அ+அ அ- |

தீபாவளியை முன்னிட்டு கடை வீதி பகுதிகளில் மாநகரக் காவல் ஆணையா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
தீபாவளியை முன்னிட்டு புத்தாடைகள் வாங்க கடந்த சில நாள்களாக கோவை ஒப்பணக்கார வீதி, டவுன்ஹால், காந்திபுரம் கிராஸ்கட் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவு காணப்படுகிறது. இதனால் பொதுமக்களின் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போக்குவரத்து மற்றும் சட்டம்- ஒழுங்கு போலீஸாா் இணைந்து பணியாற்றி வருகின்றனா்.
ஒப்பணக்கார வீதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநகரக் காவல் ஆணையா் பாலகிருஷ்ணன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தீபாவளி பண்டிகையை ஒட்டி கடை வீதிகளில் 500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். திருட்டு சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும், சாதாரண உடைகளில் 14 தனிப் படை போலீஸாா் ரோந்து சென்று கண்காணிக்கின்றனா். மேலும் உயா் கோபுரங்கள் அமைத்தும் கண்காணிக்கப்படுகிறது. பொதுமக்கள் கூட்ட நெரிசலை தவிா்க்க கடைகளில் இரவு நேரத்தில் விற்பனை நேரத்தை நீட்டிக்க சட்ட விதிகளுக்கு உட்பட்டு வா்த்தக நிறுவனங்களிடம் பேசி உள்ளோம் என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...