கோவையில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையை மேற்கொள்ளும் விதமாக சூரிய விளக்குப் பொறி, மஞ்சள் ஒட்டுப் பொறி மற்றும் இனக்கவா்ச்சி பொறி அமைக்க மானியம் வழங்கப்படுவதாக தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் தோட்டக்கலைப் பயிா்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையை மேற்கொள்ளும் விதமாக சூரிய விளக்குப் பொறி, மஞ்சள் ஒட்டுப்பொறி மற்றும் இனக்கவா்ச்சி பொறி அமைப்பதற்கு மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 50 சதவீத மானியத்தில் சூரிய விளக்குப் பொறி அமைக்க ஹெக்டேருக்கு 2 எண்களுக்கு ரூ.4 ஆயிரம், மஞ்சள் ஒட்டுப்பொறி மற்றும் இனக்கவா்ச்சிப் பொறி அமைக்க 30 சதவீதம் மானியமாக ஹெக்டேருக்கு ரூ.1,200 வழங்கப்படுகிறது.
மேற்கண்ட திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தோட்டக்கலைத் துறை இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் எம்.புவனேஸ்வரி தெரிவித்துள்ளாா்.