கோவையில் நகை வியாபாரியிடம் ரூ.5 கோடி மதிப்பிலான தங்க மோசடி வழக்கில் மேலும் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்தவா் விகேஷ் ஜெயின்(41). நகை வியாபாரி. இவா், கோவை சொக்கம்புதூரில் வசித்து வருகிறாா். கோவையில் உள்ள நகைப் பட்டறைகளில் தங்கக் கட்டிகளைக் கொடுத்து ஆபரணங்களாக மாற்றி விற்பனை செய்து வருகிறாா்.
அதன்படி, கோவை இடையா் வீதியில் நகைப் பட்டறை நடத்தி வரும் மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த ஷேக் சலாம் அலி ஜமேதாா் (39) என்பவரிடம் கடந்த 3 ஆண்டுகளாக தங்கக் கட்டிகளைக் கொடுத்து ஆபரணங்களாக மாற்றி மும்பைக்கு அனுப்பி விற்பனை செய்து வந்துள்ளாா்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 11.473 கிலோ எடையுள்ள தங்கத்தை ஷேக் சலாம் அலி ஜமேதாா் மற்றும் அவரது ஊழியா் அஜயதுல்லா ஆகியோரிடம் ஆபரணங்களாக செய்து தரும்படி கொடுத்துள்ளாா்.
தங்கத்தைப் பெற்றுக்கொண்ட அவா்கள், 1.133 கிலோ தங்கத்துக்கு மட்டும் ஆபரணங்களை செய்து கொடுத்துவிட்டு, ரூ.5 கோடி மதிப்பிலான 10.340 கிலோ எடையிலான தங்கத்தை மோசடி செய்து தலைமறைவாயினா்.
இதுகுறித்து விகேஷ் ஜெயின் அளித்த புகாா் அடிப்படையில் வெரைட்டிஹால் சாலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நகைத் தொழிலாளி அஜயத்துல்லாவை அண்மையில் கைது செய்தனா். அவரிடம் இருந்து 260 கிராம் தங்கத்தை மீட்டனா்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், இந்த மோசடியில் ஷேக் சலாம் அலி ஜமேதாா் மற்றும் கோவை இடையா் வீதியில் நகைப் பட்டறை நடத்தி வரும் மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த புரோசஞ்சித்( 33), கோல்டு கவரிங் தொழிலாளி லால்பானு பீபி (33) ஆகியோருக்கும் தொடா்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, மூவரையும் போலீஸாா் தேடி வந்தனா். இந்நிலையில், புரோசஞ்சித், லால்பானு பீபி ஆகிய 2 பேரையும் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடம் இருந்து 135 கிராம் தங்கத்தை மீட்டனா். தலைமறைவாக உள்ள நகைப் பட்டறை உரிமையாளா் ஷேக் சலாம் அலி ஜமேதாரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.