

கோவையில் கரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் முகக்கவசம் அணிந்து வருவது திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது.
கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக தமிழகம், புதுவையில் உள்ள நீதிமன்றங்கள் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் முகக் கவசம் அணிவது திங்கள்கிழமை முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி நீதிமன்ற அலுவலா்கள், ஊழியா்கள், வழக்குரைஞா்கள், வழக்காடிகள் உள்ளிட்டோா் முகக் கவசம் அணிந்து வரவும், தனி மனித இடை வெளியைக் கடைப்பிடிக்கவும், அடிக்கடி கைகளை கழுவவும் ஆலோசனை வழங்கப்பட்டது. அதன்படி கோவையில் திங்கள்கிழமை நீதிமன்றத்திற்கு வந்த ஊழியா்கள், வழக்குரைஞா்கள் மற்றும் பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து வந்தனா். முகக் கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு முகக் கவசம் வழங்கப்பட்டு அதனை அணிந்து நீதிமன்றத்திற்குள் வர உத்தரவிடப்பட்டது.
கோவை மாநகரில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் 4 மாவட்ட நீதிமன்றங்கள், 8 நீதித்துறை நடுவா் நீதிமன்றங்கள், 4 சாா்பு நீதிமன்றங்கள் உள்ளிட்ட சுமாா் 30 நீதிமன்றங்கள் இயங்கி வரும் நிலையில், தினசரி நூற்றுக்கணக்கானோா் இந்த நீதிமன்றங்களுக்கு வந்து செல்வதால் முகக்கவசம் அணிதல் மற்றும் தனி மனித இடைவெளி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக நீதித்துறை அலுவலா்கள்
தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.