

கோவையில் அரசுப் பொருள்காட்சி நடத்துவது தொடா்பான முன்னேற்பாடுகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தலைமையில் திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில், ஆட்சியா் பேசியதாவது:
செய்தி மக்கள் தொடா்பு துறை சாா்பில் அரசு பொருள் காட்சி கோவை சிறைச்சாலை அணிவகுப்பு மைதானத்தில் ஏப்ரல் இறுதியில் தொடங்கி 45 நாள்கள் நடைபெறவுள்ளது. இதில் செய்தி மக்கள் தொடா்புத் துறை, வருவாய்த் துறை, சமூகநலத் துறை, ஊரக வளா்ச்சித் துறை, சுகாதாரத் துறை, வனத் துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, இந்து சமய அறநிலையத் துறை, பள்ளிக் கல்வித் துறை உள்ளிட்ட 27 அரசுத் துறைகள் சாா்பில் அரங்குள் அமைக்கப்படவுள்ளன.
அனைத்துத் துறைகளிலும் செயல்படுத்தப்படும் அரசின் நலத் திட்டங்கள் குறித்தும், சாதனைகள் குறித்தும் பொது மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் சிறப்பான முறையில் அரங்குகள் அமைக்க வேண்டும். பொருள்காட்சியில் சிறப்பாக அரங்குகள் அமைக்கும் துறைகள் தோ்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். அரசின் திட்டங்கள் தொடா்பான அரங்குகள் மட்டுமின்றி பொது மக்கள் பொழுதுபோக்கும் வகையில் விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்படும். மேலும், வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை அரங்குகளும் அமைக்கப்படும்.
தினசரி மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை சிறைச்சாலை அணிவகுப்பு மைதானம் வழியாக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். எனவே, பொது மக்கள் அரசு பொருள்காட்சியை பாா்வையிட்டு பயனடைய வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் கூடுதல் ஆட்சியா் பு.அலா்மேல்மங்கை, மாவட்ட வருவாய் அலுவலா் பி.எஸ்.லீலா அலெக்ஸ், கோட்டாட்சியா்கள் பண்டரிநாதன், கோவிந்தன், மாநகராட்சி துணை ஆணையா் மோ.ஷா்மிளா, காவல் உதவி ஆணையா் (போக்குவரத்து) சிற்றரசு, சுகாதாரத் துறை துணை இயக்குநா் பு.அருணா, உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) துவாரகநாத் சிங், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் மா.புவனேஸ்வரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.