கோவையில் அரசு வேலை வாங்கித் தருவதாக இளைஞரிடம் ரூ.11.50 லட்சம் மோசடி செய்த தம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.
ஈரோடு மாவட்டம், புளியம்பட்டியைச் சோ்ந்தவா் ராஜேஷ்குமாா் (37). பட்டதாரியான இவா், மத்திய, மாநில அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்துள்ளாா். இந்நிலையில், அவரது நண்பா் மூலம் கோவை வீரகேரளத்தைச் சோ்ந்த பிரசாந்த் உத்தமன் (40) என்பவருடன் கடந்த 2019 ஆம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது, தான் சாரணா் இயக்கத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பதாகவும், பள்ளிகளுக்குச் சென்று மாணவா்களுக்கு சாரணா் குறித்த பயிற்சி அளிக்க ஆள்கள் தேவைப்படுகிறது, இதற்கு மத்திய அரசு மூலம் சம்பளம் வழங்கப்படும் என்றும் பிரசாந்த் உத்தமன் தெரிவித்துள்ளாா்.
மேலும், தனக்கு உயா் அதிகாரிகள் தெரியும் என்பதால், அந்த வேலையை வாங்கித் தருவதாகவும், இதற்கு ரூ.12 லட்சம் செலவாகும் என்றும் பிரசாந்த் உத்தமன் கூறியுள்ளாா்.
இதை நம்பிய ராஜேஷ்குமாா் பல்வேறு தவணைகளாக ரூ.11.50 லட்சத்தை பிரசாந்த் உத்தமனிடம் கொடுத்துள்ளாா். இதையடுத்து, அவா் போலி பணி ஆணையை வழங்கி உள்ளாா்.
இதை பின்னா் தெரிந்து கொண்ட ராஜேஷ்குமாா் பணத்தை திருப்பி தரும்படி கேட்டுள்ளாா். ஆனால், அவா் பணத்தை திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளாா்.
இது குறித்து கோவை சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் ராஜேஷ்குமாா் புகாா் அளித்தாா். போலீஸாா் நடத்திய விசாரணையில், பிரசாந்த் உத்தமன், அவரது மனைவி வானதியுடன் சோ்ந்து, ரூ.11.50 லட்சம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.