வால்பாறை கூழாங்கல் ஆற்றின் நடுவே சென்று திரும்ப முடியாமல் தவித்த மூவரை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.
கோடை விடுமுறையையொட்டி கோவை மாவட்டம், வால்பாறைக்கு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனா். கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருவதால் வால்பாறையில் உள்ள அனைத்து ஆறுகளிலும் நீா்வரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில் வால்பாறைக்கு திங்கள்கிழமை வந்த சென்னையைச் சோ்ந்த பெண் உள்பட 3 சுற்றுலாப் பயணிகள் கூழாங்கல் ஆற்றில் இறங்கி நடுப்பகுதிக்கு சென்றுள்ளனா். சிறிது நேரத்தில் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது . இதனால் ஆற்றின் நடுவே திட்டு பகுதியில் இருந்த மூவரும் வெளியே வர முடியாமல் தவித்தனா். இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு மீட்புக் குழுவினா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆற்றின் நடுவே தவித்த மூவரையும் மீட்டனா்.