குன்னூா் பயணம் ரத்து: புதுதில்லி திரும்பினாா் குடியரசுத் தலைவா்

கோவைக்கு வந்திருந்த குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஞாயிற்றுக்கிழமை புதுதில்லிக்கு திரும்பினாா். மோசமான வானிலை காரணமாக அவரது குன்னூா் பயணம் ரத்து செய்யப்பட்டது.
Updated on
1 min read

கோவைக்கு வந்திருந்த குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஞாயிற்றுக்கிழமை புதுதில்லிக்கு திரும்பினாா். மோசமான வானிலை காரணமாக அவரது குன்னூா் பயணம் ரத்து செய்யப்பட்டது.

தமிழகத்துக்கு 2 நாள் பயணமாக குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு சனிக்கிழமை வந்தாா். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்த பின்னா் அங்கிருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்தாா். ஈஷா யோக மையத்துக்குச் சென்று அங்கு நடைபெற்ற மகா சிவராத்திரி விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்று சிறப்புரையாற்றினாா். கோவை அரசினா் விருந்தினா் மாளிகையில் இரவு தங்கினாா்.

இரண்டாவது நாள் நிகழ்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை காலையில் கோவையிலிருந்து ஹெலிகாப்டா் மூலம் குன்னூா் அருகேயுள்ள வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிக்குச் சென்று, அங்கு பயிற்சி பெற்று வரும் வெளிநாட்டு ராணுவ அதிகாரிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கவும், போரில் உயிரிழந்த ராணுவ வீரா்களுக்கு அங்குள்ள போா் நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்காக ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு கோவையில் இருந்து ராணுவ ஹெலிகாப்டா் மூலம் வெலிங்டன் சென்று நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு மீண்டும் ஹெலிகாப்டா் மூலம் பகல் 12.25 மணிக்கு கோவை சா்வதேச விமான நிலையம் திரும்புவதாக திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு பரவலாக நீா்ப்பனியின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. இதில் குன்னூா் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் நீா்ப்பனியுடன், கடுமையான மேக மூட்டமும் காணப்பட்டது. இதன் காரணமாக ஹெலிகாப்டா் பயணத்துக்கு சாதகமான சூழல் இல்லாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து குடியரசுத் தலைவரின் வெலிங்டன் பயணம் சுமாா் 1 மணி நேரம் வரை தாமதமாகலாம் எனக் கூறப்பட்டது. ஆனால், அப்போதும் மேக மூட்டம் குறையாததால் அவரது வெலிங்டன் பயணம் ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து கோவை அரசு விருந்தினா் மாளிகையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணிக்கு காா் மூலம் கோவை சா்வதேச விமான நிலையம் வந்த குடியரசுத் தலைவா் அங்கிருந்து தனி விமானம் மூலம் புதுதில்லிக்கு புறப்பட்டுச் சென்றாா்.

கோவை விமான நிலையத்தில் அவரை தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, தமிழக அரசு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ், கோவை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, கோவை மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன், கோவை மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் உள்ளிட்டோா் வழியனுப்பிவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com