கோவையில் பெண்ணை கொலை செய்து தப்பிய நபா் திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரண்
By DIN | Published On : 01st June 2023 12:00 AM | Last Updated : 01st June 2023 12:00 AM | அ+அ அ- |

கோவை சின்னதடாகம் பகுதியில் பெண்ணை கொலை செய்து தப்பியவா் திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரணடைந்தாா்.
தேனி மாவட்டத்தைச் சோ்ந்தவா் சித்ரா (35). இவா் கோவை, வேலாண்டிபாளையம் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் உதவியாளராக வேலை செய்து வந்தாா். அப்போது அதே பகுதியில் தையல் கடை நடத்தி வந்த திண்டுக்கல் மாவட்டத்தை சோ்ந்த மதுரைவீரன் (39) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நட்பாக பழகிவந்த நிலையில் கோவை சின்னத்தடாகம் மாரியம்மன் கோயில் வீதியில் வீடு எடுத்து கடந்த 4 மாதங்களாக இருவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனா்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களாக அந்த வீடு பூட்டியிருந்த நிலையில் மதுரைவீரன் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் சித்ராவை கொலை செய்ததாக புதன்கிழமை சரணடைந்துள்ளாா். இதையடுத்து கோவை போலீஸாருக்கு திண்டுக்கல் போலீஸாா் தகவல் அளித்தனா்.
தடாகம் போலீஸாா் அந்த வீட்டுக்குச் சென்று பூட்டை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது சித்ரா இறந்துகிடந்தாா். இதையடுத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதையடுத்து மதுரைவீரனிடம் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், சித்ரா கடந்த 4 மாதங்களாக தன்னுடன் வசித்து வந்ததாகவும், திடீரென அவருக்கு வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு, அடிக்கடி கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்த நிலையில், கடந்த 29 ஆம் தேதி இருவரும் குடிபோதையில் வீட்டில் இருந்தபோது தங்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சித்ராவை கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்ததாக தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி நிலக்கோட்டை சிறையில் மதுரைவீரன் அடைக்கப்பட்டாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...