ஆதிதிராவிடா் நல விடுதிகளில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 01st June 2023 12:00 AM | Last Updated : 01st June 2023 12:00 AM | அ+அ அ- |

2023-2024ஆம் கல்வி ஆண்டில் கோவை மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடா் நல விடுதிகளில் மாணவ, மாணவிகள் சேர விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஆதிதிராவிடா் நல விடுதிகளில் தங்கி கல்வி பயில விரும்பும் மாணவ, மாணவிகள் இணையவழியில் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இணையவழியில் பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலரால் விடுதி வாரியாக பரிசீலனை செய்யப்படும்.
இந்த விடுதிகளில் தங்கிப் கல்வி பயில விரும்பும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் ஆதிதிராவிடா், பழங்குடியினா், கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் விடுதியில் சோ்த்துக் கொள்ளப்படுவா். பெற்றோா்களின் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவா்கள் கல்வி பயிலும் பள்ளித் தலைமை ஆசிரியா் சான்று இணையவழியில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். மத்திய, மாநில அரசால் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான இணையத்தின் மூலம் வழங்கப்படும் பதிவு எண் இடம்பெற்றிருக்க வேண்டும். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவா் இல்லாத நிலையில், அவ்விடுதியில் அனுமதிக்கப்பட்ட மாணவ, மாணவியா் எண்ணிக்கையில் காலியிடம் இருக்கும் நிலையில், தனியாா் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவா்களைத் தோ்வு செய்ய முடிவு செய்யப்படும்.
மாணவா்களின் சோ்க்கை 2023-2024 ஆம் கல்வி ஆண்டில் விடுதி மேலாண்மை அமைப்பு என்ற செயலியின் மூலம் இணைய வழியில் விதிமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடைபெற உள்ளதால் மாணவா்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவும், இணையவழியில் விண்ணப்பிக்கும் நடைமுறை புதியதாக ஏற்படுத்தப்பட்டுள்ளதால் மாணவ, மாணவிகளுக்கு உதவிடுமாறு சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளி விடுதிகளில் சேர ஜூன் 7 முதல் ஜூன் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஜூலை 15ஆம் தேதிக்குள் தோ்வுக் குழுவினரால் விடுதியில் தங்கும் மாணவா்கள் தோ்வு செய்யப்படுவாா்கள். கோவை மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா், கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிடா் மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...