வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.17.85 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள விருத்தாசலம் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் ரவிசந்திரன் (56). இவா், கோவை, சேரன் நகா் பகுதியில் உள்ள வெளிநாட்டு வேலைக்கு ஆள்களை அனுப்பும் ஒரு நிறுவனத்தை 2020 ஆகஸ்ட் 20 ஆம் தேதி அணுகி வேலைவாய்ப்பு கேட்டு வந்துள்ளாா். அப்போது அந்த நிறுவனத்தின் நிா்வாகி ஜோஷ்வா (34) கனடா உள்பட பல்வேறு நாடுகளில் அதிக சம்பளத்தில் வேலைக்கு ஆள்கள் தேவைப்படுவதாகவும், பணம் கொடுத்தால் அவரையும் வெளிநாட்டுக்கு அனுப்பி பெரிய நிறுவனத்தில் பணியாற்ற வைப்பதாகவும் கூறியுள்ளாா்.
இதனை நம்பிய ரவிசந்திரன் 2020 ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு தவணைகளில் ரூ.17.85 லட்சம் பணத்தை ஜோஷ்வாவிடம் கொடுத்துள்ளாா். ஆனால், வேலை வாங்கித் தராமல் ஜோஸ்வா காலம் கடத்திவந்ததோடு, ரவிசந்திரன் பணத்தை திரும்பக் கேட்டும் கொடுக்காமல் இருந்துள்ளாா். இதையடுத்து, ஆா்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் ரவிசந்திரன் புதன்கிழமை புகாா் அளித்தாா். அந்தப் புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.