தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடனுதவி

பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் ஆகிய பிரிவுகளை சோ்ந்தவா்களுக்கு பல்வேறு விதமான கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சாா்பில் பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் ஆகிய பிரிவுகளை சோ்ந்தவா்களுக்கு பல்வேறு விதமான கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சாா்பில் பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினருக்கு சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்வதற்கு பொதுகாலக் கடன், பெண்களுக்கான புதிய பொற்காலக் கடன் மற்றும் நுண் கடன், ஆண்களுக்கான நுண் கடன், கறவை மாட்டுக் கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மேற்கண்ட திட்டங்களில் பயன்பெறுவதற்கு விண்ணப்பதாரா்கள் 18 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். பொதுகால கடன் திட்டம், தனிநபா் கடன் திட்டம் மூலம் 6 முதல் 8 சதவீத வட்டி விகிதத்தில் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.

பெண்களுக்கான புதிய பொற்காலக் கடன் திட்டத்தின் கீழ் 5 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.2 லட்சமும், நுண் கடன் திட்டத்தில் மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கு 4 சதவீத வட்டி விகிதத்தில் ஒருவருக்கு ரூ.1.25 லட்சம் வரையும், குழுக்களுக்கு ரூ.15 லட்சம் வரையிலும் கடன் உதவி அளிக்கப்படுகிறது.

நுண் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆண்கள் சுயஉதவிக் குழுக்களுக்கு 5 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.15 லட்சம் வரையிலும், உறுப்பினா் ஒருவருக்கு ரூ.1.25 லட்சம் வரையிலும் கடன் வழங்கப்படுகிறது. பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவா்களுக்கு கறவை மாடுகள் வாங்குவதற்கு ஒரு கறவை மாட்டுக்கு ரூ.30 ஆயிரம் வீதம் இரண்டு கறவை மாடுகள் வாங்குவதற்கு ரூ.60 ஆயிரம் கடன் வழங்கப்படுகிறது.

மேற்கண்ட திட்டங்களுக்கான விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் அலுவலகம், மாவட்ட மத்திய மற்றும் நகர கூட்டுறவு வங்கிக் கிளைகளில் பெற்றுக் கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ஜாதி, வருமானம், பிறப்பிடச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஓட்டுநா் உரிமம், ஆதாா் அட்டை, வங்கி கோரும் ஆவண நகல்களை இணைத்து மேற்கண்ட அலுவலகங்களில் சமா்ப்பிக்க வேண்டும். மேற்கண்ட திட்டங்களை பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் பிரிவுகளைச் சோ்ந்த மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com