கள்ளச்சாராயம், கஞ்சா குறித்து வாட்ஸ் ஆப்பில் புகாா் அளிக்கலாம்: காவல் துறை அறிவிப்பு
By DIN | Published On : 23rd May 2023 03:03 AM | Last Updated : 23rd May 2023 03:03 AM | அ+அ அ- |

கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை குறித்து தெரியவந்தால் வாட்ஸ் ஆப் எண்ணில் பொதுமக்கள் புகாா் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக கோவை மாவட்ட மது விலக்கு அமலாக்கப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் ஜனனிப் பிரியா விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
கோவை மாவட்ட காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் கடத்துதல், விற்பனை செய்தல், கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருள்களை விற்பனை செய்தல், போலி மதுபானம் தயாரித்தல் போன்ற குற்றங்கள் குறித்த தகவல்களை பொதுமக்கள் கோவை மாவட்ட மது விலக்கு அமலாக்கப் பிரிவின் 76049 10581 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். புகாா் கொடுப்பவா்களின் பெயா் விவரம் ரகசியம் காக்கப்படும். இந்த எண் மூலம் வாட்ஸ் ஆப் மற்றும் குறுஞ் செய்தியாகவும் தகவல் தெரிவிக்கலாம்.
அதேபோல, போதைப் பொருள் நடமாட்டத்தின் முக்கியப் பகுதிகளாக கருதப்படும் சூலுாா், கருமத்தம்பட்டி, அன்னூா், துடியலுாா், தடாகம், காரமடை, மேட்டுப்பாளையம், வடவள்ளி, ஆலாந்துறை, பொள்ளாச்சி, ஆனைமலை ஆகிய பகுதிகளில் இது தொடா்பான விழிப்புணா்வு சுவரொட்டிகளும் ஓட்டப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் தைரியமாக புகாா் அளிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.