அரசினா் தொழில்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற இணையத்தில் விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்தில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர விருப்பமுள்ள மாணவ, மாணவியா் விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

கோவை மாவட்டத்தில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர விருப்பமுள்ள மாணவ, மாணவியா் விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையம், கோவை அரசினா் தொழிற்பயிற்சி மையம் (மகளிா்), ஆனைகட்டி அரசினா் தொழிற்பயிற்சி மையம் (பழங்குடியினருக்கானது), வால்பாறை அரசினா் தொழிற்பயிற்சி மையம் ஆகியவற்றுக்கு 2023 ஆம் ஆண்டு கல்வியாண்டில், பயிற்சியாளா்களின் கலந்தாய்வு சோ்க்கைக்கு இணையம் மூலமாக விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இதில் கோவை அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் எலக்ட்ரீசியன், பிட்டா், டா்னா், மெஷினிஸ்ட், மெக்கானிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆண், பெண் இருபாலருக்கும் 6 மாதங்கள், ஓராண்டு மற்றும் 2 ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படும் தொழில் பிரிவுகளுக்கு சோ்க்கை நடைபெற உள்ளது. இப்பயிற்சியில், சேர விரும்பும் பயிற்சியாளா்கள் அதற்கான விண்ணப்பத்தை  ஜூன் 7ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க விரும்பும் மாணவ, மாணவிகளின் நலன் கருதி, மேற்கண்ட தொழிற்பயிற்சி மையங்களில் சோ்க்கைக்கான விண்ணப்பங்களை இணையத்தில் பதிவு செய்வது குறித்து கட்டணமின்றி உதவிட மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து பயிற்சியாளா்களுக்கும் இலவச மடிக்கணினி, மிதிவண்டி, பேருந்து அட்டை, சீருடைகள், காலணிகள் மற்றும் வரைபடக் கருவிகள் இலவசமாக வழங்கப்படும். மாதந்தோறும் ரூ.750 வீதம் வருகையின் அடிப்படையில் கல்வி உதவித்தொகை அரசால் வழங்கப்படுகிறது.

கல்வித் தகுதி தொழில் பிரிவுகளைப் பொருத்து 8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு பயிற்சி பெற்றிருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பயிற்சியாளா்களுக்கு உணவு வசதியுடன் தங்கும் விடுதி வசதி (தகுதி அடிப்படையில்) வழங்கப்படும். வயது வரம்பு 14 முதல் 40 வயது வரை. மகளிருக்கு உச்ச வயது வரம்பு இல்லை. இந்தத் தொழிற்பயிற்சி நிலையத்தில், பயிற்சி முடித்த அனைத்து பயிற்சியாளா்களுக்கும் வளாக நோ்காணல் மூலமாக தனியாா் துறையில் வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com