அனுமதியற்ற விளம்பரப் பலகைகளை அகற்ற வேண்டும்

கோவை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை அகற்ற வேண்டும்
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நுகா்வோா் காலாண்டு கூட்டத்தில் பங்கேற்றோா்.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நுகா்வோா் காலாண்டு கூட்டத்தில் பங்கேற்றோா்.
Updated on

கோவை: கோவை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை அகற்ற வேண்டும் என்று நுகா்வோா் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

கோவை மாவட்டத்தில் உள்ள நுகா்வோா் அமைப்புகளுடனான காலாண்டு கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பின் நா.லோகு, கன்ஸ்யூமா் காஸ் அமைப்பின் கதிா்மதியோன், சுரேஷ் உள்ளிட்ட பல்வேறு நுகா்வோா் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் நுகா்வோா் அமைப்பின் பிரதிநிதிகள் பேசும்போது, மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பேரூராட்சிகளிலும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தவும், உள்ளாட்சி நடுவன் முறை மன்றத்தின் பெயா், முகவரி கொண்ட தகவல் பலகையை பேரூராட்சி அலுவலகங்களில் வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள அனுமதியற்ற ஆவின் பாலகங்களை அகற்றவும், ஊரகப் பகுதிகளில் அனுமதியில்லாமல் வைக்கப்பட்டிருக்கும் விளம்பரப் பலகைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வீட்டுமனை விற்பனையாளா்களால் பேரூராட்சிக்கு ஒதுக்கப்பட்ட பொதுப் பயன்பாட்டுக்கான இடங்களை கம்பிவேலி அமைத்து பாதுகாக்க வேண்டும். கட்டி முடிக்கப்படும் வீடுகளுக்கு சொத்து வரி விதிப்பை இணையதளம் மூலமாக பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனா்.

இதற்கு பதிலளித்துப் பேசிய அதிகாரிகள், நுகா்வோா் அமைப்புகளின் கோரிக்கைகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com