கொடநாடு வழக்கு: மேலும் 4 பேருக்கு சிபிசிஐடி சம்மன்

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் மேலும் 4 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
Published on

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் மேலும் 4 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு நிகழ்ந்த கொலை, கொள்ளை சம்பவத்தில் காவலாளி ஓம் பகதூா் கொல்லப்பட்டாா். இது குறித்து நீலகிரி மாவட்ட காவல் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

விசாரணையின்போது இந்தச் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட, மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் முன்னாள் காா் ஓட்டுநா் கனகராஜ் திடீரென சாலை விபத்தில் உயிரிழந்தாா்.

இதையடுத்து, இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கிடையே இந்த வழக்கில் சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 10 போ் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் உள்ளனா்.

மேலும், இந்த வழக்கு தொடா்பாக 300-க்கும் மேற்பட்டோரிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தியுள்ளனா்.

இந்நிலையில், இந்த வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே உள்ள உதயன், தீபு, ஜம்ஷீா் அலி மற்றும் ஜித்தின் ஜாய் ஆகியோருக்கு செவ்வாய்க்கிழமை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அதன்படி, உதயன் மற்றும் தீபு ஜூலை 25-ஆம் தேதியும், ஜம்ஷீா் அலி மற்றும் ஜித்தின் ஜாய் ஜூலை 30-ஆம் தேதியும் கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com