நண்பரை கத்தியால் குத்திய இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை
நண்பரை கத்தியால் குத்திய இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
கோவை, நீலிக்கோணாம்பாளையத்தைச் சோ்ந்தவா் தமிழரசன் (30). இவா் தனது வீட்டருகே நண்பா்களுடன் கடந்த 2018-ஆம் ஆண்டு பேசிக் கொண்டிருந்துள்ளாா்.
அப்போது, அங்கு வந்த வரதராஜபுரம் பகுதியைச் சோ்ந்த பிரசாந்த் (25) என்பவா் தமிழரசனின் உறவினரை தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதில் பிரசாந்த்துக்கும், தமிழரசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், ஆத்திரமடைந்த பிரசாந்த், தமிழரசனை கத்தியால் குத்தியுள்ளாா். இதில், காயமடைந்த தமிழரசன் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில், உடல் நலம் தேறி வீடு திரும்பினாா்.
இது குறித்து தமிழரசன் கொடுத்த புகாரின்பேரில், சிங்காநல்லூா் போலீஸாா் பிரசாந்தை கைது செய்து சிறையில் அடைத்தனா். பின்னா், அவா் பிணையில் வெளியே வந்தாா்.
இது தொடா்பான வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து தலைமை நீதித் துறை நடுவா் ராஜலிங்கம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.
இதில், குற்றஞ்சாட்டப்பட்ட பிரசாந்துக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளிக்கப்பட்டது.

