தேசிய பெண் குழந்தைகள் தின விருதுக்கு டிச.20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

தேசிய பெண் குழந்தைகள் தின விருது பெற 18 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Published on

தேசிய பெண் குழந்தைகள் தின விருது பெற 18 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், 18 வயது வரை அனைத்துப் பெண் குழந்தைகளின் கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தைத் தொழிலாளா் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தைத் திருமணங்களை தடுக்கும் வகையிலும் வீர தீர செயல்புரிந்த 18 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்.

அதன்படி தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24-ஆம் தேதி மாநில அரசின் விருதாக பாராட்டுப் பத்திரமும், ரூ.1 லட்சத்துக்கான காசோலையும் வழங்கி சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

இந்த விருது பெற விண்ணப்பிப்பவா்கள் பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு, பெண் குழந்தைத் திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிா்த்தல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான தனித்துவமான சாதனை செய்திருத்தல், பெண்களுக்கு எதிரான சமூக ஆவணங்கள் மூடநம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு தீா்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாக விழிப்புணா்வு ஏற்படுத்தி இருத்தல், ஆண்களுக்கு நிகராக பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல் உள்ளிட்ட சிறப்புகளில் ஏதேனும் கொண்டிருத்தல் வேண்டும்.

தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் டிசம்பா் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com